அரசு பள்ளி,கல்லூரி விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணம் உயர்வு

சென்னை : அரசு பள்ளி , கல்லூரிகளில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான உணவு கட்டணத்தை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

2017-18ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்திருந்தது.

இதனடிப்படையில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலப் பள்ளி விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணத்தை நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.755 லிருந்து ரூ.900ஆகவும், கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணத்தை நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.875லிருந்து ரூ.1000ஆகவும் உயர்த்தி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டார்கள்.

இதன்மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 1338 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 86,807 மாணவ, மாணவியர்கள் பயனடைவார்கள்.

இதேபோல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு உணவுக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.750 லிருந்து ரூ.900 ஆகவும், கல்லூரி மாணவ , மாணவியருக்கு உணவு கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.875லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தியும் வழங்கிட மாண்புமிகு முதல்வர் உத்தரவிட்டார்கள்.

இதன்மூலம், ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள், உண்டுஉறைவிடப் பள்ளிகள், தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் பள்ளி விடுதிகள் ஆகிய 1714 விடுதிகளில் தங்கி பயிலும் 1,38,058 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் பயனடைவார்கள்.

Thanks: samayam.com